தான் இறப்பதற்கு முன் மகனை பார்த்திட வேண்டும்; யாழில் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த தந்தை
இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்தபோதும் 17 ஆண்டுகளாக எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தையார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள இல்லத்தில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்த போதே தந்தையார் சுந்தரலிங்கம் அருணகிரிநாதர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கடந்த 2006.10.25ம் திகதி நல்லூர் அரசடி இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினால் எனது மகன் அருணகிரிநாதன் சுதன் பிடித்து செல்லப்பட்டார்.
அதன் பின்னர் சில காலம் எனது மகனை இராணுவத்தினர் வைத்திருந்ததை எமது உறவினர்கள் நண்பர்கள் பலரும் கண்டு எனக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த விடயத்தை பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியபோதும் அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசியபோது 48 பேர் கொண்ட கைதிப்பட்டியலில் தனது மகனும் இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில் மகனின் விடுதலையை கோரியபோதும் அது சாத்தியப்படவில்லை.
"நாங்கள் நிரபராதிகள் விடுதலைக்கு உதவுங்கள் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் அமைச்சர்களிடம் வேண்டுகோள்" எனும் தலைப்பில் கடந்த 2007.09.08ம் திகதி தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தியில் உள்ள புகைப்படத்தில் எனது மகனும் சிறைக்குள் இருப்பது தெரிய வந்தது.
மேலும் தினக்குரலில் வெளியான செய்தியின் படி அப்போது இருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதி அமைச்சர்களான பி.ராதாகிருஸ்ணன், கே.ஏ.பாயிஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், உள்ளிட்ட பலரும் பூசா முகாமில் கைதிகளை பார்வையிட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுதும் கைதிகள் தொடர்பாக மேலுமொரு இணைய ஊடகமொன்றில் தற்போது வெளியான புகைப்படத்தில் எனது மகன் இருப்பதும் அறியவந்தது.
இவ்வாறு எனது மகன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0776323036 என்ற இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள். எனது மகன் பற்றிய விடயங்களை காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் என இதுவரை பல இடங்களுக்கு சென்ற போதும் உரிய பதில் கிடைக்கவில்லை.
அண்மையில் காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம் குறிப்பிட்ட சிலரை கண்டுபிடித்தாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.