இலங்கையை கடன்பொறிக்குள் சீனா சிக்கவைத்ததா? அலிசப்ரி வெளியிட்ட பதில்!
சீனாவுடன் மேலும் ஒத்துழைப்பிற்கு விருப்பம் வெளியிட்டுள்ள இலங்கை சீனாவின் கடன்பொறி என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளது.
சீனாவிற்கான இலங்கை தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவேளை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களில் சீனா இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொண்டுள்ளது இருதரப்பிற்கும் பலனளிக்க கூடிய நட்புறவை மேலும் விஸ்தரிப்பதற்கு இலங்கை ஆர்வமாக உள்ளது என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
சீனாவின் முதலீடு இலங்கைக்கு மிகமிக முக்கியமானது
இந்நிலையில் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டம் இலங்கையை கடன்பொறிக்குள் சிக்கவைத்துள்ளது என மேற்குலக ஊடகங்கள் தெரிவிப்பதை அலிசப்ரி நிராகரித்துள்ளார்.
சில ஊடகங்கள் தங்கள் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கின்றன சீனாவின் முதலீடு இலங்கைக்கு மிகமிக முக்கியமானது என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் 26 வருடங்களாக இலங்கை கடும் அழுத்தத்தில் இருந்தது எந்த முதலீடும் வரவில்லை அனைவரும் கைவிட்டனர்.
ஆனால் சீனாவின் முதலீடுகள் வந்தன இலங்கையின் அபிவிருத்திக்கு உதவின ஆகவே நாங்கள் இதற்காக மிகவும் நன்றியுடையவர்களாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அனைத்து கட்சிகளும் சீனாவுடன் சிறந்த உறவை கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.