தமிழர் பகுதியொன்றில் அதிகரிக்கும் ஆபத்து ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளதில் மூழ்கியிருந்தது.
இந்நிலையில் சித்தாண்டி - 2, சித்தாண்டி - 3, சித்தாண்டி - 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்கள்
குறிப்பாக சித்தாண்டி 2,3,4 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு தாக்கத்தினால் நோயாளர்கள் பதிவாகி வருகின்றதுடன் இதுவரை 64 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சிலர் வெளியேறிய நிலையில் பலர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு விசேட கள ஆய்வொன்று சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதுடன், அனைத்து பிரிவுகளிலும் உள்ள வீடுகளுக்கு சென்று அறிவுறுத்தல்கள் வழங்கி டெங்கு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையில் மட்டக்களப்பு பிராந்திய பொது சுகாதார பணிமனை அதிகாரிகள், செங்கலடி பொது சுகாதார பணிமனை பொது சுகாதார வைத்தியர் மற்றும் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் என பலரும் கலந்துகொண்டதுடன் இதன்போது 794 வீடுகள் சோதனை செய்யப்பட்டு 113 வீடுகளில் டெங்கு உறுதிப்படுத்தப்பட்டது.
இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் டெங்குவை கட்டுப்படுத்தும் மருந்துகள் மற்றும் புகை என்பன விசுறும் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.