யாழில் கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறிய மைதானம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பொது மைதானம் கட்டாக்காலி மாடுகளின் வசிப்பிடமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
உரிய பராமரிப்பு இன்றியும் ஒரு பக்க வேலியற்றும் காணப்படும் வடமராட்சி கிழக்கு பொது மைதானத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான மாடுகள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொது மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த பல வருடங்களாக காணப்படுகின்றது.
இது குறித்து அருகில் அமைந்துள்ள பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடமராட்சி வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் உடனடியாக பொது மைதானத்தின் வேலிகளை சரி செய்து, கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொது மைதானத்தின் தரத்தை பேணுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.