30 ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!
வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அந்த போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அறிவித்துள்ளார்.
அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை
மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரின் காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் ,
எதிர்வரும் 30 ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் உலகெங்கும் நினைவு கூறப்படவுள்ளது. வடக்கில் மன்னாரிலும், கிழக்கிலே மட்டக்களப்பிலும் எதிர்வரும் 30 ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழு ஆதரவையும் வழங்குவது மாத்திரமல்லாது எமது உறவுகளுக்கான நீதியை பெற்றிட தேசியத்தின்பால் ஈர்ந்துள்ள அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் புளோட் அமைப்பின் இணைப்பாளர் கேசவன், ஈ.பி.ஆர்.எப். அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம், ரெலோ அமைப்பின் பிரசன்னா இந்திரகுமார், ஜனநாயப் போராளிகள் கட்சி இணைப்பாளர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.