இலங்கையில் மனங்களை வென்ற நன்றியுணர்வு; நெகிழவைத்த சம்பவம்!(Photos)
மட்டக்களப்பில் உயிரிழந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை அவர் வளர்த்த நாய் கண்ணீருடன் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை எனும் வயோதிபப் பெண்ணொருவர் அவரது வீட்டில் பல வருடங்களாக நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.
கண்ணீருடன் பின் தொடர்ந்த நாய்
சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வயோதிபப் பெண்மணி அவரது மகளின் வீட்டில் வசித்து வந்த போது மூதாட்டி வளர்த்த நாய் அவரது மகளின் வீட்டுக்கும் சென்றுள்ளது.
இந்நிலையில் மகளின் வீட்டில் வசித்து வந்த மூதாட்டி நேற்றையதினம் (15) மரணமடைந்துள்ளார். மூதாட்டி மரணமடைந்ததை உணர்ந்து கொண்ட நாய் கண்ணீர் சிந்தி மூதாட்டியின் உடல் அருகில் நின்றுள்ளது.
மகளின் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிண்ணையடி இந்து மயானத்தில் இன்று (16) அடக்கம் செய்யப்பட்டது. இதன்போது மூதாட்டியின் இறுதிக் கிரியையில் மக்களோடு சேர்ந்து நீண்ட தூரம் பயணித்த நாய் பட்டாசு சப்தத்தையும் பொருப்படுத்தாமல் மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தில் சென்று கண்ணீருடன் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது நல்லடக்கத்தின் பின்னர் மீண்டும் அந்த நன்றியுள்ள ஜீவன் மூதாட்டி வசித்த இடத்திற்கு சென்றுள்ளது.
பெற்ற பிள்ளைகளே தாய்தந்தையரை தவிக்கவிடும் இக்காலத்தின் அந்த ஐந்தறிவு ஜீவனின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது.