அரசாங்க பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் குற்றசாட்டு
இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் 23 வருடமாக எந்தவித ஓய்வூதிய அதிகரிப்புமின்றி இருப்பதாகவும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு அதிகரிப்பு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி சமுர்த்தி பயனாளிகளுக்கும் தனியார் துறையினருக்கும் அதிகரித்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என பலர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான சுற்றறிக்கையில் மூன்று வருடத்திற்கு ஒரு தடவை ஓய்வூதிய மறுசீரமைப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்ட போதும் கடந்த 23 வருடமாக இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் பல்கலைக்கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தற்போதைய பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் தமது ஓய்வூதியம் போதாமை மற்றும் ஏனைய அரச சலுகைளையும் பெற முடியாமலும் பெரும் துன்ப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 5000 ரூபாய் அதிகரிப்பை ஏனைய ஓய்வூதியர்களுக்கு வழங்கியதுபோன்று, பல்கலைக்கழங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்குவதுடன், தமக்கான ஒரு சீரமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தம்மையும் வாழ வழிவிடுமாறும் பல்கலைக்கழகங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மேலும் கோரியுள்ளனர்.