யாழில் கள்ள உறுதி எடுத்து அரச காணிகளை ஆட்டையைப்போட்ட நபர்; மக்களுக்கு அச்சுறுத்தல்!
யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும், பொலிசாரை வைத்து கைது செய்வோம் என மிரட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில்,

இடியன் துவக்கால் சுடுவோம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் விவசாயம் செய்துவந்த நிலையில் அப்பகுதியில் காணப்பட்ட பல ஏக்கர் கணக்கான அரச காணி தனி நபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதோடு குறித்த நபரால் அத்துமீறி அடைக்கப்பட்ட குறித்த காணி அரசகாணி எனவும் நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ள நிலையில் இதுவரை உரிய அதிகாரிகளால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்தரும் மரங்களை நட்டு காலாகாலம் தாம் விவசாயம் செய்துவந்த பகுதியை தனி நபர் ஒருவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சுவீகரித்துள்ளார் குறித்த பகுதிக்கு நாம் செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும்,பொலிசாரை வைத்து கைது செய்வோம் என மிரட்டுவதாக கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது அங்கிருந்த மணல் மற்றும் காடுகள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக ஏனைய இடங்களுக்கு கடத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த காணி அரச காணியென பிரதேச செயலர் அறிவித்தும் இதுவரை சம்மந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார தலையிட்டு தமக்கான தீர்வினை பெற்று தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.