சுவிஸ் வாழ் தாய் - சகோதரியால் வீதிக்கு வந்த தாயும் சிறுமியும்; கண்ணீர் விடும் அரச ஊழியர்!
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸாரால் இளம் தாய் மற்றும் 10 வயதான மகள் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குடும்ப பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய தாயும் சிறுமியும் வீதிக்கு துரத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
3 நாட்களாக வீட்டினுள் பூட்டி வைத்த பொலிஸார்
பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் சுவிஸ்லாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு சொந்தமான வீட்டில் பெண் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.
பாதிக்கப்பட்ட பெண் அரசாங்க உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் நிலையில், அவர் இதுவரை அரச விடுதியில் வசித்து வந்த நிலையில் தற்போது வேறு வீடு பார்த்துச் செல்லவுள்ள நிலையில் தற்காலிகமாக தனது தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணையும், அவரது மகளையும் 3 நாட்களாக வீட்டினுள் பூட்டி வைத்திருந்த முள்ளியவளை பொலிஸார், கடந்த புதன்கிழமை நள்ளிரவன்று வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
அவரது நகை, பணம் உட்பட உடமைகள் அனைத்தையும் பறித்து வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு பின் பெண்ணையும், அவரது மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கச் சென்றபோது அப்பெண்ணின் 10 வயதான மகளை தாயிடமிருந்து பிரித்து சப்பாத்துக் கால்களால் உதைத்து அடித்துள்ளனர்.
கணவனும் வெளிமாவட்டத்தில் பணி
இதற்கு முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான பொஸிஸ் அதிகாரி மற்றும் பொலிஸார் துணை நிற்பதாகவும், தான் முறைப்பாடு வழங்கச் சென்ற போது, முன்கூட்டியே விடயத்தை தெரிந்து வைத்திருந்த பொஸிஸ் அதிகாரி,
தன் முறைப்பாடை கவனத்தில் எடுக்கவில்லை எனவும், சம்பவத்துக்கு சுவிஸ்லாந்தில் வசிக்கும் தனது தாய் மற்றும் சகோதரிகளே காரணம் என பொஸிஸ் அதிகாரி தன்னிடமே தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் தனது குழந்தை சப்பாத்துக் காலால் உதைத்து அடித்தபோது தான் உடனடியாக சிறுவர் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்த நிலையில் அவர்கள் முறைப்பாடு வழங்க நேரடியாக கொழும்பு வருமாறு கூறியதாகவும் பாதிக்கப்பட பெண் கூறியுள்ளார்.
கணவனும் அரச அதிகாரியாக வெளிமாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் தமக்கு ஏற்பட்ட அராஜகத்துக்கு நீதி வேண்டி தனது மகளுடன் , வீதியில் இருந்து பெண் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றுக்கும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வெளிநாட்டில் வசித்து வரும் தனது தாய் மற்றும் சகோதரிகளின் உந்துதல் காரணமாகவே பொலிஸ் அதிகாரி உட்பட அனைவரும் தனக்கு அராஜகம் பண்ணுவதும், எதற்காக பொலிஸார் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.