கிண்ணியா படகு சேவைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை!
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுச் சேவைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கிராமப்புற வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதோடு கிண்ணியா நகர சபைத் தலைவருடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவரினால் படகுச் சேவை நடாத்தப்படுவதாகவும், இதற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
குளத்தின் குறுக்கே புதிய பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும், பாலத்தின் நிர்மாணப்பணிகள் முடியும் வரை மக்கள் தடாகத்தை சுற்றி செல்வதற்காக தற்காலிக வீதியும் அமைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் அனுமதியின்றி படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றையதினம் திருகோணமலை கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் படகு கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படகில் இருந்த 11 பேர், இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது