தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு ; இரண்டு சந்தேகநபர்கள் கைது
புத்தர் சிலைகளிலிருந்து, தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள்திருடிய இரண்டு சந்தேகநபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்கக் கட்டிகள்
நாவலப்பிட்டிய - கெட்டபுலவ விகாரையிலுள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்து கலசங்களை முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு பேர் திருடிச் சென்றதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து, நாவலப்பிட்டி பொலிஸார், விகாரையில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கமரா காட்சிகளைப் பயன்படுத்தி சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
இவர்கள் புத்தர் சிலைகளின் தலைப் பகுதிக்குச் சேதம் விளைவித்துத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் பெருமளவிலான தங்கத்தையும், உருக்கப்பட்ட தங்கக் கட்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு பெறப்பட்ட தங்கம் குருநாகல் மற்றும் பிலிமத்தலாவை பகுதிகளில் தங்க வியாபாரம் செய்யும் நகை விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உருக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.