மக்களுக்கு அறிவுறுத்தல்களை முன் கூட்டியே வழங்க வேண்டும்! கொந்தளித்த கு.திலீபன்
சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது மக்களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தல்களை வழங்கி, மக்களுக்கு அசெளகரியம் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு முன் அறிவித்தலும் இன்றி வவுனியா வடக்கில் மக்களை வழிமறித்து கொரோனா தடுப்பூசி அட்டைகளை பரிசோதித்தமை தொடர்பாக மக்கள் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்தவித முன்னறிவித்தலும் வழங்காது தடுப்பூசி அட்டைகள் பரிசோதித்து வவுனியா வடக்கில் மக்களுக்கு அசௌகரியளத்தை ஏற்படுத்தியமை தொடர்பாக அப் பிரதேச மக்களால் எனக்கு தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்த விடயமாக இருந்தாலும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்களை முன் கூட்டியே வழங்கி பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அவ்வாறான அறிக்கை எதுவும் இன்னும் வெளியிடப்படாத நிலையில் சுகாதார அதிகாரி ஒருவர் தடுப்பூசி போடப்பட்ட அட்டையைக் கூட கேட்டுள்ளார்.
மேலும் புகைப்படங்களைப் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது. வயலுக்கு சென்ற உழவு இயந்திரம் கூட மறித்து வைக்கப்பட்டு காத்திருக்க வேண்டி இருந்தது. கொரோனா தொடர்பில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தவுள்ள வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.