வெளிநாடுகளில் இருந்து யாழ் செல்வோர் அவதானம்; நீங்களும் இவர்களிடம் ஏமாறலாம்!
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார்.

மிரட்டி பணம் மற்றும் நகை கொள்ளை
அங்கு கணவனும் அவரது மச்சானும் குறித்த இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே பாணியில் ஒரு சம்பவம் இடம்பெற்ற நிலையில் அது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த குழுவினரை சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே முறைப்பாடுகள் இருப்பதாகவும், அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.