சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி; காவலர்கள் துப்பாகிச்சூடு
நேற்றைய தினம் காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், நேற்று வியாழக்கிழமை (12) நண்பகல் சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தகராறு
குடும்பத்தகராறு தொடர்பான குற்றச்சாட்டில் பத்தேகம நீதவான் நீதிமன்றினால் குறித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சந்தேக நபர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேகநபர், சிறைச்சாலையில் உள்ள சந்தேகநபர்கள் பதிவு செய்யும் பிரிவின் கூரை மீது ஏறி, பின்னர் பார்வையாளர் சந்திப்பு கட்டடத்தின் கூரை வழியாக ஓடி தப்பியோட முயன்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்போது சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு கோபுரத்தில் கடமையிலிருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை அச்சுறுத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சத்தத்தால் அதிர்ச்சியடைந்த கைதி, சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இருந்த மணல் குவியலின் மீது குதித்துள்ளார். விரைந்து செயற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் அவரைப் பிடித்து, சிறைக்கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள அறையில் தடுத்து வைத்துள்ளதாக காலி சிறைச்சாலை தெரிவித்துள்ளது.