யாழில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு ஆயுத முனையில் அச்சுறுத்தல்; சிறிதரன் எம்.பி சீற்றம்
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றையதினம் மருதங்கேணிப் பகுதியில் ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பொதுமக்கள் முன்னிலையில் கஜேந்திரகுமார் எம்.பி அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தியுள்ளமை நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்பதாக சிவஞானம் சிறீதரன் காட்டமாக கூறியுள்ளார்.
உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
இந்த நாட்டின் தமிழ்ப் நாடாளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்புவாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் பிரதிநிதியான எம்.பி ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலைமுயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சிறிதரன் எம்.பி வலியுறுத்தினார்.
அதோடு, இச்சம்பவத்திற்கு தனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன் என்றும் சிறிதரன் எம்.பி கூறியுள்ளார்.