விமானப் பயணச்சீட்டுகளின் விலை மேலும் குறைப்பு
ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும் விகிதத்துக்கேற்ப விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளைக் குறைக்குமாறு இலங்கையிலுள்ள விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,விமானப் பயணச்சீட்டுகளின் விலை ஏற்கனவே சுமார் 20 சத வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் விமானப் பயணச்சீட்டுகளின் விலை மேலும் குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி படிப்படியாகக் குறைவடைந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.