ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும் வழங்கப்படும் மூன்று சதவீத கழிவை இரத்து செய்வதற்கு இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அண்மையில் தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்தை அடுத்து புதிய எரிபொருள் முன்பதிவுகளை முன்வைக்காதிருக்க இலங்கை கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.
இதனையடுத்து வார இறுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்ட நிலையில் குறித்த நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் மூன்று சதவீத கழிவை இரத்து செய்யவதற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக கனியவள விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது