நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 விசேட ரயில் சேவைகளையும், அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 சேவைகளையும் இயக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இலவச ரயில் சேவைகள்
இந்த விசேட சேவைகளை இயக்குவதற்கான முழு செலவையும் தனியார் நிறுவனம் ஒன்று ஏற்றுக்கொண்டதாகவும், இதனால் ரயில் திணைக்களம் இந்த ரயில் சேவைகள் அனைத்தையும் பயணிகளுக்கு இலவசமாக வழங்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட ரயில்கள் நாளை ( 09) ஆரம்பமாகி 12 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு ரயில் திணைக்களம் யாத்திரிகர்களுக்கான தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளையும் தயார்ப்படுத்தியுள்ளது.
அநுராதபுரத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கு ரயில் நிலையம் உட்பட பல இடங்களில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.