தங்க நகைகள் விற்பனை செய்யும் போர்வையில் மோசடி; மக்களே அவதானம்
தங்க நகைகளை விற்பனை செய்யும் போர்வையில் கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரை தாக்கி 210 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் நேற்று (30) உத்தரவிட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் சட்டத்தரணிகள் ஊடாக நேற்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 52 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலம்பொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.