ஜனாதிபதி வேட்பாளரான ரணிலுக்கு ஆதரவளிக்கும் 4 சங்கங்கள்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்குவதாக நான்கு பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
தேசிய Taxi app முச்சக்கரவண்டி தொழிற்துறை சங்கம், அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை வல்லுநர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய நான்கு பிரதான போக்குவரத்துச் சங்கங்களே இவ்வாறு அறிவித்துள்ளன.
நான்கு பிரதான போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்றையதினம் (04-09-2024) கொழும்பு காலிமுகத்திடல் பசுமை மைதானத்தில் நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து ரணிலுக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் கடன் சுமையில் தவிக்கும் சாரதிகளின் கடனை மீளச் செலுத்துதலை மறுசீரமைப்பதற்காக, அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சந்தர்ப்பம் பெற்றுக்கொடுப்பதாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.