நாட்டில் பெய்து வரும் கனமழை ; பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகாமைப் பணிப்பாளர் ர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
இராஜாங்கனை நீர்த்தேக்கங்கத்தில் ஆறு வான் கதவுகளும் ஆறு அடிக்கு திறந்துவிடப்பட்டு 8,352 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கங்கத்தில் இரண்டு வான் கதவுகள் நான்கு அடிக்கு திறந்துவிடப்பட்டு 2,442 கன அடி நீரும் வெளியேற்றப்படுகின்றது.
தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானம்
அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பிற்பகல் நேரங்களில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்தே நேற்று இரவு (17 ) குறித்த வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக, கொத்மலை நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தொடர்ந்து மழையுடனான வானிலை தீவிரமாகும் பட்சத்தில் ஏனைய வான்கதவுகளையும் திறப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அத்தோடு, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்படும் நிலையில் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கும் மேலாக நீர் பாய்ந்தோடுகின்றது.
இந்நிலையில் , காசல்ரீ நீர்த்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிள் அறிவுறுத்தியுள்ளனர்.