இந்த காலத்தில் இப்படி ஒருவரா? தாய்க்கு கோவில் கட்டி பலரையும் நெகிழவைத்த மகள்!
தன்னை கூலி வேலை செய்து படிக்க வைத்த தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது மகள் 20 லட்ச ரூபாய் செலவில் கோவில் எழுப்பியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் இடம்பெற்றுள்ளது. கூடுவாஞ்சேரி- டிபன்ஸ் காலனியைச் சேர்ந்த லட்சுமி என்ற அந்தப் பெண், அண்ணா பல்கலைக்கழகத்தில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இவரது தாய் கன்னியம்மாள் கடந்த 2019ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
சிறுவயதிலேயே தந்தை வீட்டைவிட்டு சென்றுவிட்ட நிலையில், பல இடங்களில் கூலி வேலை செய்து மகள் லட்சுமியை கன்னியம்மாள் படிக்க வைத்து அரசு வேலையும் வாங்கித் தந்துள்ளார்.
இதனால் தாய் மீது கொண்ட அதீத பாசம் வைத்த லட்சுமி, திருமணம் செய்துகொண்டால் அவரை பிரிய நேரிடும் என்று எண்ணி திருமணமே செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின்னர் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணம், ஓய்வூதியப் பணம் ஆகியவற்றைக் கொண்டு தனது தாய்க்கு அவர் கோவில் எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் , தாய்க்காக மகளின் இந்த செயல் பலரையும் கவர்ந்துள்ளது.

