நடுகடலில் விபத்துக்குள்ளான மீன்பிடி படகுகள் ; மீனவர்கள் மாயம்
மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகள் விபத்தில் சிக்கியுள்ளன.
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு படகொன்றும், களுத்துறை பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடி படகொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இரு இடங்களில் விபத்து
நேற்று மாலை (27) தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுவதோடு, மேலும் படகு ஒரு வணிகக் கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும், விபத்தில் சிக்கியவர்களில் ஒரு மீனவர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஏனைய நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளித்த பின்னர், காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக விசேட படகொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதோடு, காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடும் பணியை மேலும் பல மீன்பிடி படகுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து கரையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதேவேளை, களுத்துறை பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் தனுஷா மெரீன் என்ற படகில் சென்றுள்ளதோடு, அளுத்கம பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.