இலங்கையில் முதன் முறையாக பேருந்தில் பெண் நடத்துனர்கள்!
இலங்கைப் போக்குவரத்து சபைக்கு முதன் முறையாக பெண் நடத்துனர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி இ.போ.ச நடத்துனர்களாக தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் வைத்து இன்று (06) நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்
இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும். நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன,
இந்த நிகழ்வை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று விவரித்தார், நியமிக்கப்பட்டவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முதல் அதிகாரப்பூர்வ பெண் நடத்துனர்களாக வரலாற்றில் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றதிலிருந்து போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றி, பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் கூறினார்.
மேலும் நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.