பதவியேற்க சென்றவர் மீது துப்பாக்கி பிரயோகம்; தெய்வாதீனமாக தப்பிய நபர்
பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராகப் பதவியேற்கச் சென்ற தர்ஷன் சமரவிக்ரம என்பவர் மீது இன்று (05) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று (05) காலை மேல் மாகாணத்தின் மீகொட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 62 வயதுடைய நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு முறை துப்பாக்கிப் பிரயோகம்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தனது வீட்டிலிருந்து வல்பிட்ட கெமுனு மாவத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் நான்கு முறை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நபரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.