யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் தீ விபத்து ; இராணுவ உடைமைகள் சேதம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் , இராணுவத்தினரின் உடைமைகள் சில தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பாரியளவிலான இயந்திரங்களின் இரும்புகளை அகற்றும் பணியினை தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்து வருகின்றது.

எரிவாயு கசிவு
அந்நிலையில் இன்றைய தினம் வழமை போன்று இரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக அவ்விடத்தில் நெருப்பு பற்றியுள்ளது.
கடும் காற்று காரணமாக அது பாரியளவில் பற்றி எரிந்தமையால் அருகில் இருந்த இராணுவத்தினரின் மினி முகாமிலும் தீப்பற்றியதால் , அங்கிருந்த இராணுவத்தினரின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளது.
இது தொடர்பில் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் அங்கிருந்த ஏனைய இராணுவத்தினரின் தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டது.