அரசாங்கம் இதனை செய்தால்... தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும்!
நிதி விடுவிப்பு தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை வெளியிட்டால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தவிர்க்க முடியாத காரணிகளினால் ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை செயற்படுத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.
தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளமை கவலைக்குரியது. நிதி நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.
பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி விடுவிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.
நிதி தொடர்பில் சாதகமான தீர்மானம் கிடைக்கப் பெற்றால் அதனை அடிப்படையாக கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
ஓரிரு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த முடியும். நிதி நெருக்கடியினால் தேர்தலை நடத்த முடியாது என்பது நாட்டில் வழக்கமாகிவிட்டால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.
தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை சிதைவடையும். நிதி இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் அது தவறானதொரு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.