கொரோனா விதிமுறைகளை மீறி தேர் திருவிழாவை நடாத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
கெரோனாப் பரவல் அதிகரிக்கும் இக்காலத்தில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் தேர் திருவிழாவை நடாத்தியதாக தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக சுன்னாகம் பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கெரோனாப் பரவல் அதிகரிக்கும் நிலையில் ஒன்றுகூடல் நிகழ்வுகளை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த 5 ஆம் திகதி, சுகாதாரப்பிரிவினருக்கு அறிவிக்காமல் அதிகாலை நேரத்தில் தெல்லிப்பழை பொலிஸ்நிலையத்துக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தேர் திருவிழா நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக சுகாதாரப்பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்த போது அங்கு சென்ற சுகாதாரப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் தேர்திருவிழா நடந்ததா? இல்லையா? என மக்கள் கருத்துததெரிவிக்க விரும்பவில்லை. அதனால் ஆதாரம் எதுவும் அவர்களுக்கு சிக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த திருவிழாவின் ஒளிப்படக்காட்சிகள் இணையாத்தளம் ஒன்றில் 6 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை அவதானித்த சுகாதாரப்பிரிவினர் உடனடியாக கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நேற்றை தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் குறித்த கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக தெல்லிப்பழை பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.