மகனின் போதையால் பார்வையை இழந்து பரிதவிக்கும் தந்தை! விடுத்த கோரிக்கை
வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான தனது மகனை திருத்தி, சமூகத்தில் நல்ல பிரஜையாக்க முயன்ற பொறுப்பான தந்தையொருவருக்கு மகனால் பார்வை பறிபோன துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துயரமான சம்பவம் கடந்த18ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த தந்தை தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவத்தில் 67 வயதான சத்ஹத்துல்லா ஹசனார் என்ற முதியவரே பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கூறிய அவர்,
எனது மகனின் போதைப்பொருள் பாவனையை நிறுத்த தொடர்ந்தும் முயற்சித்து வந்தேன். 4 வருடங்களாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். போதைப்பொருள் பாவிக்க வேண்டாம். கெட்ட நண்பர்களுடன் சேர வேண்டாம் என்று புத்திமதி சொன்னதாலேயே தனக்கு இந்நிலை ஏற்பட்டதாகவும் அவர் கண்ணீர் வடிக்கின்றார்.
எனது மகனுக்கு தற்போது 19 வயது, அவன் 2017ஆம் ஆண்டில் இருந்தே போதைக்கு அடிமையாகி விட்ட நிலையில், அவனை திருத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறேன்.
அத்துடன் எனது மகன் போதைப்பொருள் பாவிப்பதால், நான் பள்ளிவாசலில் செய்ய வேலையையும் விட்டு விட்டேன். மகனைத் திருத்த வேண்டும் என்பதற்காக, 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை ஐந்து தடவைகள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும் அது பலனளிக்கவில்லை. அவனது நண்பர்களிடமும் நான் கெஞ்சியபோதும், அதில் யாரும் திருந்தவில்லை என்பதுடன் எனது மகனை விட்டு அவர்கள் விலகவுமில்லை.
சம்பவம் இடம்பெற்ற அன்று, மகன் என்னிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டபோது அதனை நான் கொடுக்க மருத்ததால் எனது தலையில் கல்லால் கடுமையாக தாக்கி எனது கழுத்தை நெரித்து, கொலை. செய்ய முயற்சித்தான். இந்நிலையில் அவனுடன் கடுமையாக போராடித்தான் அவனது பிடியிலிருந்து விடுபட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன். எனினும் , எனது கண்ணைஅவன் தோண்டி எடுத்துவிட்டான்.
இப்போது எனது இடது கண் முழுமையாக எடுக்கப்பட்டு விட்ட நிலையில் வலது கண்ணும் 80 சதவீதம் பாதிப்படைத்துள்ளதாக வைத்தியர்கள் சொல்லியுள்ளனர். எனினும் , நான் கவலைப்படவில்லை. தைரியமாக இருக்கிறேன். எனது மகனை நான் ஜெயிலுக்கு அனுப்பவில்லை. அவர் செய்த வேலையால்தான் அவர் இப்போது சிறையில் இருக்கிறார் என்றார் .
எனக்கு நடந்த இந்தச் சம்பவம் போல, இனி யாருக்கும் நடக்கக் கூடாது என கல்லங்கும் அந்த தந்தை, பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்திருப்பதுடன், ஒவ்வொரு, பெற்றோர்களும் பிள்ளைகள் விடயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
நாட்டில் இப்போது, போதைப்பொருள் பாவனையும் விற்பனையும் அதிகரித்து விட்டதனால் இளம்பிள்ளைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல குடும்பங்களில் நிம்மதியில்லாமல் போய் விட்டதாக கூறிய அவர், தனக்கு நடந்ததுபோல் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் போதைபழக்கத்தில் இருந்து நம் இளைய சமூகத்தை பாதுக்காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அந்த தந்தை கேட்டுக்கொண்டார்.