படிக்காமல் டிக் டொக் பார்த்த மகனுக்கு சூடு வைத்த தந்தை! விசாரணைக்கு சென்ற பொலிஸாரின் மனிதாபிமானம்
தெனியாய பிரதேசத்தில் படிக்காமல் இணையத்தில் டிக் டொக் பார்த்துக் கொண்டிருந்த தனது 13 வயது மகனைக் கண்டிக்கும் வகையில், சூடான இரும்புக்கம்பியால் சிறுவனின் பின்பகுதியில் சுட்டு காயமேற்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தந்தை கூலி வேலைக்கு சென்றபோது தனது கைத்தொலைபேசியை வீட்டில் மறந்து வைத்து சென்றுள்ளார். வீட்டில் இருந்த பிள்ளைகள் அந்தத் தொலைபேசியை எடுத்து அன்றைய தினம் முழுவதும் டிக் டொக் வீடியோக்களை பார்த்துள்ளனர்.

ஆத்திரமடைந்த தந்தை
வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தை, பிள்ளைகளை படிக்குமாறு கூறிவிட்டு இரவு உணவை தயார் செய்யச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தின் பின்னர் பிள்ளைகள் படிக்கின்றார்களா என பார்க்க சென்றபோது, மீண்டும் தனது கைத்தொலைபேசியில் டிக் டொக் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த தந்தை, அடுப்பிலிருந்த சூடான இரும்புக்கம்பியால் மூத்த மகனின் (13 வயது) பின்பகுதியில் சுட்டு காயமேற்படுத்தியுள்ளார்.
மறுநாள் பாடசாலைக்கு சென்ற சிறுவனின் நிலைமையை அவதானித்த அதிபர், இது குறித்து தகவல் பெற்றுக்கொண்டதுடன், மாணவனை சிகிச்சைக்காக தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பத்தின் நிலைமை மற்றும் அவர்கள் வாழும் சூழலை ஆராய்வதற்காக அவர்களின் வீட்டிற்குச் சென்ற தெனியாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன அமரத்ன, அங்கே உண்பதற்குக் கூட எதுவும் இல்லாத வறுமை நிலையை அவதானித்துள்ளார்.
பிள்ளைகளின் நிலை மற்றும் மனைவியின் சுகவீனம் ஆகியவற்றை கண்டு மனமிரங்கிய நிலையப் பொறுப்பதிகாரி, அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் இருந்த பணத்தை சேகரித்து, அந்த குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை உடனடியாக வாங்கி கொடுத்து மனிதாபிமானத்துடன் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.