ஓட்டல் மவுத் ஃப்ரெஷ்னரால் ரத்த வாந்தி எடுத்த குடும்பம்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் ஹோட்டல் ஒன்றில் மவுத் ஃப்ரெஷ்னரை பயன்படுத்திய குடும்பம் ரத்தவாந்தி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் செக்டர் 90 பகுதியில் லா ஃபாரஸ்டா கபே என்ற ஓட்டல் ஒன்று உள்ளது.
ஐஸ் கலந்த மவுத் ஃப்ரெஷ்னர்
அங்கித் குமார் என்பவர் தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் நேற்று அங்கு சென்று உணவருந்திய பின், அவர்கள் ஐஸ் கலந்த மவுத் ஃப்ரெஷ்னரை சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் அவர்களது நாக்குகளில் எரிச்சல் ஏற்பட்டதுடன் சிலருக்கு வாயில் புண் ஏற்பட்டு ரத்தம் வடியத் துவங்கியது. அதுமட்டுமல்லாது ஒருவர் வாந்தியும் எடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
தகவலறிந்து வந்த பொலிசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.