கடற்றொழிலுக்கு சென்ற முல்லைத்தீவு குடும்பஸ்தர் மாயம்
முல்லைத்தீவு கடலில் கடற்றொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவரை தேடும் பணியில் கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27.07.2023 அன்று கள்ளப்பாடு தெற்கில் வசிக்கும் 39 வயதுடைய நவரத்தினம் சுதேந்திரன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் படகில் தனியாக கடற்தொழிலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடிய கடற்றொழில் படகுகள்
அன்றைய தினம் காலையாகியும் குறித்த நபர் கரை திரும்பாத நிலையில் கடலில் தனிமையில் இருந்த படகினை ஏனைய கடற்றொழில் படகுகள் அவதானித்து அந்த இடத்திற்கு சென்றபோது கடலில் படகு மற்றும் மிதந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
நீண்ட நேரமாக தேடியும் அவரை காணாத நிலையில் படகினை இழுந்து கொண்டு கரை வந்துள்ளார்கள்.
படகில் அவரது சறம் மற்றும் உடைகள் காணப்பட்ட நிலையில் இது குறித்து கடற்றொழிலாளர் சங்கத்தினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன கடற்றொழிலாளரை ஏனைய கடற்றொழில் படகுகள் தேடியும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இரண்டு நாட்கள் கழிந்தும் கடற்றொழிலாளரை தேடும் பணியில் ஏனைய கடற்றொழில் படகுகள் ஈடுபட்டு வருகின்றார்கள்.