திருகோணமலையில் கொரோனா தொற்றால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிண்ணியா பழைய துறையடியை பிறப்பிடமாகவும் குறிஞ்சக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் கொவிட்19 காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாறுக் குறைஷ் வயது (41) எனவும் தெரியவருகிறது. இலங்கை மின்சார சபையின் கிண்ணியா கிளையில் சாரதியாக கடமையாற்றி வந்த இரு பிள்ளைகளின் தந்தையுபாவார்.
கொரோனா தொற்று காரணமாக சில தினங்களுக்கு முன் ஈச்சிளம்பற்று தனிமைப்படுத்தும் முகாமில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் ஜனாசா நாளை (13) ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் உயிரிழந்தவரின் மனைவி பிள்ளைகள் குச்சவெளியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.