வவுனியாவில் குடும்பஸ்தர் கொலை சம்பவத்தில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் சிக்கினர்!
வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கைகலப்பில் கூறிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 36 வயதான மைந்தன் இருதயராஜா எனும் குடும்பஸ்தர் 29.08.2024 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள கற்பகபுரம் கிராமத்தில் கடந்த 27.08.2024 அன்று இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பான விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு பிரதான சந்தேக நபரை தேடிவந்த நிலையில் இன்று (03/09/2024) வவுனியா மாவட்ட விசேட குற்ற விசாரனை பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட குற்ற விசாரனைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பிரிவிற்கான பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுகந்த் அவர்கள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேக நபரை நாளைய தினம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ஆள் அடையாள அணிவகுப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.