போலி ஆவணங்கள் தயாரித்து வந்த நபர் கைது!
அக்கறைப்பற்று நகரத்தில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அக்கறைப்பற்று நகரத்தில் போலி ஆவணங்களை தயாரித்து வந்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நிலையத்திலிருந்து கணினி மற்றும் மடிக்கணினி உட்பட 26 உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதானது, சட்டவிரோத செயற்பாடாகும். அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று வருடங்கள் அல்லது அதற்கும் அதிகமான வருடங்கள் சிறை தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்.
இதேவேளை, அண்மையில் நபரொருவர் போலி ஆவணங்களை பெற்றுக் கொண்டு அதனை குருணாகலையில் அமைந்துள்ள நிதி நிலையத்துக்கு வழங்கியுள்ள சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், போலி ஆவணங்களை போன்று , போலி அடையாள அட்டைகளும் அச்சிடப்படுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.