மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று (30 ) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாகக் காத்தான்குடிக்குச் சென்று கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை தொடர்ந்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி. பிரதீபன் முன்னிலையில் இன்று (30) முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வுப் பணி
இந்த அகழ்வுப் பணியின் போது சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும், விசேட அதிரடிப்படையினர், குற்றத்தடயவியல் பிரிவினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் இந்த அகழ்வுப் பணியைப் பார்வையிட வருகை தந்திருந்தனர்.