சிறைசாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா; யாரை சந்தித்தார்?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை அண்மையில் நேரில் சென்று சந்தித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தான் சிறைச்சாலைக்கு வந்து ஒருவரை சந்திப்பது மிக அரிதான ஒரு விடயம் எனக் குறிப்பிட்டார்.

நாட்டை இயக்குவதற்குத் தகுதியான நிர்வாக அதிகாரிகள் தேவை
சமன் ஏக்கநாயக்க ஒரு "சிறந்த மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி" என்பதாலேயே அவரை சந்திக்க வந்ததாக அவர் தெரிவித்தார்.
நாட்டை முறையாக வழிநடத்துவதற்குத் திறமையான நிர்வாகச் சேவை மிகவும் அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, "நாட்டை இயக்குவதற்குத் தகுதியான நிர்வாக அதிகாரிகள் தேவை" என வலியுறுத்தினார்.
எந்தவொரு அரசியல் சார்புமற்ற, திறமையான அதிகாரிகளை இலக்கு வைக்கும் போக்கு ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பமானதாக அவர் இதன்போது குற்றம் சுமத்தினார்.
தற்போதைய அரசாங்கமும் அதே போன்றதொரு அரசியல் பழிவாங்கல் போக்கையே பின்பற்றி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சாடினார். இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பிற்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
தற்போது நிலவும் இந்த சூழ்நிலை குறித்த எனது அதிருப்தியை வெளிப்படுத்தவே நான் சிறைச்சாலைக்கு வந்தேன். சமன் ஏக்கநாயக்கவுடன் நான் மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். அவர் மிகச் சிறந்த மனிதர்.
பொதுச் சேவையில் இணைவதற்குப் பாரிய திறமையும் தகுதியும் தேவை. அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் நாட்டுக்கு மிக முக்கியமானவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.