யாழில் அதிகரிக்கும் வன்முறைகள்; ஆளுநர் விடுத்த அறிவிப்பு
வடமாகாணத்தில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள் கவலையளிப்பதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், வன்முறைகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என கோரியுள்ளார்.
நேற்றய தினம் மெய்நிகர் வழியாக ஊடக சந்திப்பை நடாத்திய வடமாகாண ஆளுநரிடம் அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள வன்செயல்கள் தொடர்பாக வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் தமக்கு ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டால் தனது இணைப்புச் செயலாளர் மற்றும் பிரத்தியோக செயலாளரை தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூக விரோத செயற்பாடுகள் தொடர்பில் தான் கவலை அடைவதாகவும், இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் கைதுகள் அதன் பின்னணியிலேயே இடம்பெறுவதாகவும் தெரிவித்த அவர், சமூகத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக தமது இணைப்புச் செயலாளரது தொலைபேசி இலக்கமான 0777229338, அல்லது பிரத்தியக செயலாளர் இலக்கமான 0768095139 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.