தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அவசர அறிவுறுத்தல்
நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதிகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேர்தல் ஆணையத் தவிசாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்வரும் 20ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது முடிவடையும் என்றும், அதன் பிறகு அணிவகுப்பு, வாகன அணிவகுப்பு அல்லது ஒன்றுகூடல் போன்றன சட்டத்தால் அனுமதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை திங்கட்கிழமை 17ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால், அதுவரை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்தவிதமான இடையயூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.