உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டது "எல்ல ஒடிசி நானுஓயா" தொடருந்து சேவை!
நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய தொடருந்து சேவை இன்று (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நானுஓயா தொடருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விஷேட சமய வழிபாட்டு நிகழ்வின் பின்னர், பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தலைமையில் தொடருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் சுற்றுலா தேவை
தற்போதுள்ள பயணிகளின் சுற்றுலா தேவையின் அடிப்படையில் இந்த தொடருந்து சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
இந்த தொடருந்து செவ்வாய்க்கிழமையை தவிர வாரத்தின் ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும் பிற்பகல் ஒரு மணிக்கு பதுளையிலிருந்து கண்டிக்கும் இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 7,000 ரூபாவும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 6,000 ரூபாவும் மூன்றாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு 5,000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த தொடருந்து சேவையினை பாராட்டி நானுஓயா தொடருந்து நிலையத்தில் பெருமளவான வெளிநாட்டு ,உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் , சுற்றுலா பயணிகள் வழிகாட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த தொடருந்து சேவையைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.