அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மர்மமான முறையில் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவில் 2012ம் ஆண்டு படகுமூலம் அடைக்கலதேடி சென்ற இலங்கை தமிழ் அகதியொருவர் உயிரிழந்துளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது.
அவுஸ்திரேலியா சென்ற 53 வயது ஈழத்தமிழர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார் என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.
12 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி
நவ்றுவில் சிறிதுகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர் பிரிட்ஜிங்விசாவில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 12 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்துவந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் தங்கியிருந்த போதிலும் சமூகத்துடன் ஆழமான தொடர்புகளை கொண்டிருந்த போதிலும் அவருக்கு பாதுகாப்பு விசா மறுக்கப்பட்டுவந்தது.
இதன் காரணமாக அவர் இலங்கையில் உள்ள தனது இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் சேரமுடியாத நிலை காணப்பட்டதாக தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் யுத்தம் இனப்படுகொலை காரணமாக அவர் அங்கிருந்து தப்பியோடிவந்தார்,பாதுகாப்பையும் சிறந்த எதிர்காலத்தையும் தேடினார் என தெரிவித்துள்ள தமிழ் ஏதிலிகள் பேரவை, ஆனால் விசாகாரணமாக அவர் குடும்பத்தை பிரிந்தே இருக்கவேண்டிய நிலை காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் தொழில்கட்சி ஆட்சிக்குவந்து இரண்டு வருடங்களாகின்றது எனினும் அவர்கள் அகதிகளிற்கு விசா வழங்க மறுப்பதே அந்த உயிரிழப்பிற்கு காரணம் என தமிழ் ஏதிலிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியின் போது இவ்வாறான மரணங்கள் அடிக்கடி இடம்பெற்றன,மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கியுள்ள நிலையில் அகதிகள் சமூகத்தில் மீண்டும் இவ்வாறான மரணங்களை காணமுடிவதாக தமிழ் ஏதிலிகள் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.