World’s End இல் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சாரதி; குவியும் பாராட்டு!
நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட மாணவர் குழு சுற்றுலா நோக்கில் அந்த பகுதிக்கு சென்றிருந்தது.

செல்பி எடுக்க முயன்றபோது பள்ளத்தாக்கிற்குள் விழுந்த மாணவி
அப்போது, 23 வயதுடைய மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி பள்ளத்தாக்கிற்குள் சரிந்து விழுந்துள்ளார்.
அந்த வேளையில், மாணவர்களை அழைத்துச் சென்ற நுவரெலியாவைச் சேர்ந்த வாகன சாரதி பிரான்சிஸ், “பொடி மல்லி” என அறியப்படும் அவர், தன்னுடைய உயிரையே பணயம் வைத்து உடனடியாக பள்ளத்தாக்கிற்குள் இறங்கியுள்ளார்.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக, கீழே விழுந்திருந்த மாணவியை தாங்கிப் பிடித்தபடி, இராணுவத்தினர் வரும்வரை அவர் துணிச்சலுடன் காத்திருந்தார். பின்னர் மீட்பு குழுவினரின் உதவியுடன் மாணவி பாதுகாப்பாக மேலே கொண்டு வரப்பட்டார்.
இந்த தைரியமான மற்றும் பொறுப்பான செயல் காரணமாக, வாகன சாரதி பிரான்சிஸுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.