'முசாசி' படக் குழுவை சந்தித்த பிரதமர் தினேஷ் குணவர்தன
இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் 'முசாசி' படக் குழுவினரை நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
இலங்கையில் முகாமிட்டுள்ள படக்குழு
இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள்.
படக்குழுவினரை கௌரவப்படுத்துவதற்காக நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பினை ஏற்ற படக் குழுவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படத்தை படக் குழுவினர் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.