துருக்கியின் தூதுவரை சந்தித்த பிரதமர் தினேஷ் குணவர்தன
துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் (Rakibe Demet) வெள்ளிக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.
நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள் சிலர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடவதற்காக இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
புதிய நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்பு யோசனை
இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டுச் சபையின் முதலீட்டு வசதித் திட்டங்கள், முதலீடுகளை மேலும் மேற்கொள்ள துருக்கிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்பு யோசனை மூலம் முதலீட்டாளர்களை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய இயந்திரங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்வளத் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்ய துருக்கிக்கு இப்போது வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை தமது நாடு ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் இரண்டு மருத்துவ உதவிப்பொருட்கள் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருப்பதாகவும் துருக்கிய தூதுவர் இதன்போது தெரிவித்தார்.