டிஜிட்டல் மயமாகும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்!
போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி, எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களமானது இ-மோட்டாரிங் திட்டத்தின் கீழ் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி மோசடி மற்றும் ஊழலை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக நேற்று (21.11.2023) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிபதிகள் உரிய அனுமதியை வழங்குவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 10,000க்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்கி எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.