சட்ட வைத்திய அதிகாரி வரவில்லை; வவுனியா இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்
வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா, பாவற்குளத்தின், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று (16) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக் கறை காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.
சட்ட வைத்திய அதிகாரி வரவில்லை
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.
சடலத்தை நேற்று (16) மாலை பார்வையிட்ட பதில் நீதவான் அன்ரன் புனிதநாயகம் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டதுடன், இது தொடர்பான துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
வவுனியா வைத்தியசாலையின் பிணவறை குளிரூட்டிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வராமையால சடலம் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படாது பிரேத அறையில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்