மரண தண்டனை கைதி மீது கொலை முயற்சி? தீவிரமாகும் விசாரணை
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 'தெமட்டகொட சமிந்த' என அழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத் என்பவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் குறித்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து தன்னை வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றுவதைத் தடுப்பதற்காக, சமிந்தவே இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தெமட்டகொட சமிந்த
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்த தற்போது பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்தவாறே அவர் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக குற்றச் செயல்களை வழிநடத்துவதாக கடந்த காலங்களில் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இதனடிப்படையில், தெமட்டகொட சமிந்தவை வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், அவர் அங்கு வைத்து படுகொலை செய்யப்படவுள்ளதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இச்சம்பவம் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்சவின் வழிகாட்டலில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, பூஸ்ஸ சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
பூஸ்ஸ சிறையிலிருந்து தன்னை இடமாற்றுவதைத் தடுப்பதற்காகவே தெமட்டகொட சமிந்த இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருக்கலாம் என பொலிஸார் வலுவாகச் சந்தேகிக்கின்றனர்.