கல்முனையில் 3 பொலிஸ் அதிகாரிகளால் கொலை அச்சுறுத்தல்!
3 பொலிஸ் உத்தியோகத்தர்களால் நீரோடும் வடிகால்களை துப்பரவு செய்து கொண்டிருந்த கல்முனை மாநகர சபை சுகாதார ஊழியர்கள் மேற்பார்வையாளர் உட்பட மாநகர சபை உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் நீரோடும் வடிகான்களை மாலை துப்பரவு செய்து கொண்டிருந்த மாநகர சபை ஊழியர்கள் மேற்பார்வையாளர் மீது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பொலிஸ் அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மீதும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 திகதி வெள்ளிக்கிழமை இரவு பாண்டிருப்பு பகுதியில் கல்முனை மாநகர சபையினர் அண்மையில் பெய்த அடை மழை காரணமாக துர்வாரப்படாமல் இருந்த சீர்செய்து வடிகான்களை நீர் வடிந்தோடச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது பொலிஸார் என கூறி சம்பவ இடத்திற்கு சென்ற மூவர் மாநகர சபை ஊழியர்களை தாக்கியதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
மேலும் இவ்வாறு தாக்குத்ல் மேற்கொண்டவர்கள் யாருடைய அனுமதியை பெற்று இந்நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள் என தெரிவித்து தாக்குதல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் ஒன்று கூடுவதை அறிந்த குறித்த மூவரும் அவ்விடத்தில் இருந்து சென்றதாகவும் மதுபானம் அருந்திய நிலையில் காணப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கல்முனை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.