இலங்கையில் காதலியை கொன்ற காதலனுக்கு மரணதண்டனை!
கடந்த 2020ஆம் ஆண்டு மெதகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவியாபொல பகுதியில், தனது காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலைத் தீயிட்டு எரித்த காதலனுக்கு மொனராகலை மேல்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (31) அன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மொனராகலை மேல்நீதிமன்ற நீதிபதி கலாநிதி தமித் நலிந்த ஹேவா வசம், இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கண்டி, பலகல்ல ரத்தரன்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரனகே டொன் அசேல பிரபாத் மிஹிரங்க வீரசிங்க (சம்பவத்தின் போது வயது 27) என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்ட கால விசாரணை
கடந்த 2020 ஜூன் 01ஆம் திகதி, மெதகம, திவியாபொல பகுதியைச் சேர்ந்த அஞ்சலி சதுரிக்கா சௌமியா (வயது 27) எனும் தனது காதலியின் வீட்டிற்குச் சென்ற எதிரி, அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் கொலையை மறைப்பதற்காக சடலத்தைத் தீயிட்டு எரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்திருந்தது.
நீண்ட கால விசாரணைகளின் பின்னர், பிரதிவாதிக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் எதிரி தரப்பிற்காக சிரேஷ்ட சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வாவுடன் சட்டத்தரணி வசந்த ரத்நாயக்க முன்னிலையாகினர். அரசு தரப்பில் அரச சட்டத்தரணி துமிந்த டி சில்வா வழக்கை மெய்படுத்தினார்.