இலங்கை குறித்து சர்வதேசத்தில் இருந்து வந்த அபாய எச்சரிக்கை!
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை மேலும் சரிவை சந்திக்கும் என்றும் உணவு கிடைப்பது குறையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் வருமானம் குறைந்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை குடும்பங்களின் போதுமான உணவை வாங்கும் திறனை பாதிக்கின்றதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
அத்துடன் தற்போது உள்நாட்டு விவசாய உற்பத்தி மற்றும் சர்வதேச விலை உயர்வு ஆகியவற்றுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைப் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் காரணமாக அடுத்த மாதங்களில் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உண்டாக்கி, வீட்டு வருமானத்தை பாதித்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை சிக்கலாக்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் பலவீனமான மாற்று விகிதம் ஆகியவற்றுடன், உணவு, எரிபொருள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்து, இந்த ஆண்டில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.